விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்
விண்வெளி ஆராய்ச்சியில் கலாமின் குருவாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் டாக்டர் விக்ரம் சாராபாய். அவர் ஒரு தலை சிறந்த விஞ்ஞானி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிறந்த விஞ்ஞானி என்றாலும் மிகுந்த பெருந்தன்மை வாய்ந்தவர். தன்னுடன் பணியாற்றும் சக விஞ்ஞானிகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். அதை விடப் பொறாமை இல்லாதவர். தனக்குக் கீழ் இருப்பவர்களின் கருத்தையும் காது கொடுத்துக் கேட்டு அது நல்ல திட்டமாக இருக்கும் பட்சத்தில் அன்புடன் அதனை அங்கீகரிப்பார். ஒருவேளை தனக்குக் கீழ் இருக்கும் விஞ்ஞானிகள் யாரேனும் தவறு செய்தால் மென்மையாக அதனை சுட்டிக் காட்டுவார். யாரையுமே புண்படுத்தாதவர். அப்படிப் பட்ட விக்ரம் சாராபாய், ஏவுகணைத் திட்ட விபரங்களை பற்றி கலாமிடமும் அவரது குழுவில் இருந்த மற்ற விஞ்ஞானிகளிடமும் அடிக்கடி கலந்து உரையாடுவார்.
ஒரு நாள் எஸ்.எல். வி. விண்கலம் பற்றிக் கலாமிடம் சில அவசரத் தகவல்களை சாராபாய் பெற விரும்பினார். இவ்விஷயத்தை அறிந்து தில்லியில் இருந்து திரும்பிய கலாம் உடனடியாக திருவனந்தபுரத்திற்கு சென்று தனது குருவும், தலைவருமான சாராபாயை சந்திக்க விரைந்தார். ஆனால், கலாம் வருவதற்குள் விக்ரம் சாராபாய் மாரடைப்பில் இறந்து போய் இருந்தார். அதனைக் கேட்டுக் கலாம் துடித்துப் போனார். சாராபாயுடன் மிக நெருக்கமான பழக்கத்தை கொண்டவர் நமது கலாம். அவரால் சாராபாயின் மரணத்தை தாங்க முடியவில்லை. கதறித் துடித்தார். பிறகு சில நாட்கள் வருத்தத்தில் இருந்த கலாம் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டு தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.
தும்பா வளாகத்தில் உள்ள எல்லா அமைப்புகளையும் ஒன்று இணைத்து இந்திய அராசாங்கத்தால் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக விஞ்ஞானி டாக்டர் பிரம்ம பிரகாஷ் பொறுப்பேற்றார். மேலும், சாராபாயின் மரணத்திற்குப் பிறகு எஸ்.எல். வி. திட்ட மேலாளராக கலாம் நியமிக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் கலாமின் முக்கிய நோக்கம் பூமியைச் சுற்றி 400 கி. மீ. சுற்றுப் பாதையில் 40 கிலோ எடை உள்ள செயற்கைக் கோளை நிறுவுவது ஒன்று தான். அதற்கு ஸ்ரீ ஹரிக் கோட்டாவில் உள்ள மையத்தை சரியான இடமாகக் கருதி தேர்ந்தெடுத்தார் கலாம். தனது குருவான சாராபாயின் செயல் திட்டத்தை செயல்படுத்துவது ஒன்று தான் அவருக்கு செய்யும் சரியான அஞ்சலி என்பதை உணர்ந்த கலாம் இரவும், பகலும் பாடுபட்டு தனது அறிவியல் திட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றி முடித்தார். அவருக்கு உறுதுணையாக இஸ்ரோவின் அப்போதைய தலைவர் தவான் இருந்தார். குறிப்பிட்ட நாளில் திட்டம் வெற்றிகரமாக முடிந்து இந்தியா தனது செயற்கைக் கோளை ஏவி சாதனை படைத்தது
Comments
Post a Comment