கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்
சிறு வயதில் இருந்தே கலாம் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகி வந்தார். அவரிடம் பல நல்ல குணங்கள் இருந்தன. அவரது அந்த நல்ல குணங்கள் ஆசிரியர்களிடம் அவருக்கு நல்ல மதிப்பைப் பெற்றுத் தந்தன. அந்த வகையில் கலாம் படித்துக் கொண்டு இருந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருந்தவர் சிவசுப்பிரமணிய அய்யர். அவர் பொதுவாகவே அனைத்து மாணவர்களுடனும் அன்புடன் பழகுவார். அதிலும் அவருக்கு கலாம் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் தான் கலாமிற்கு அறிவியல் மீது இருந்த ஆர்வத்தை தூண்டியவர் என்றும் கூடச் சொல்லலாம்.
ஒரு நாள் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் கலாமின் மீது அவருக்கு இருந்த அன்பின் காரணமாக அவரை தன் வீட்டு விருந்துக்கு அழைத்தார். கலாமும் ஆசிரியரின் வீட்டுக்கு அன்புடன் ஓடி வந்தார். காலம் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்ட அந்த ஆசிரியரின் மனைவி அவருக்கு உணவு பரிமாற மறுத்து விட்டார். மனைவியின் இந்தச் செய்கையால் சிவசுப்பிரமணிய அய்யர் மிகவும் வருந்தினார். ஆனால், அதே சமயத்தில் கலாமின் மனம் வேதனை அடையாத படி தாமே கலாமிற்கு உணவு வகைகளை பரிமாறி அவர் அருகில் அமர்ந்து உணவருந்தினார்.
அப்போது மாணவரான கலாம் தனது ஆசிரியரின் அந்த உயர் பண்பினை எண்ணி மிகவும் மனம் நெகிழ்ந்தார். அத்துடன் சற்று இயற்கையாகவே கூச்ச சுபாவம் கொண்ட கலாம் அமைதியாக உணவை உட்கொண்டார். எச்சில் படுத்தாமல் பக்குவமாக தண்ணீர் கோப்பையில் இருந்த நீரை அருந்தினார்.
விருந்து முடிந்தவுடன் வீட்டிற்கு கலாம் புறப்பட்ட சமயம். ‘அடுத்த வாரமும் நீ இங்கு சாப்பிட வர வேண்டும். இது எனது அன்புக் கட்டளை’ என்று கூறினார் ஆசிரியர். ஆசிரியர் கூறிவிட்டால் மறுக்க முடியுமா? அதனால் அடுத்த வாரமும் குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியரின் வீட்டை அடைந்தார் கலாம்.
இந்த முறை ஆசிரியர் உணவு பரிமாறுவதற்குப் பதிலாக அவரது மனைவியே எந்த வித வற்புறுத்தலும் இல்லாமல் கலாமை புரிந்து கொண்டு உணவை அன்புடன் அவருக்குப் பரிமாறினார். அப்போது அதனைக் கண்டு சிவசுப்பிரமணிய அய்யர் மட்டும் அல்ல கலாமும் கூட மனம் நெகிழ்ந்தார். இந்தச் சம்பவமே பிற்காலத்தில் சாதி மத வேற்றுமையைக் கடந்து ‘நான் முதலில் ஒரு இந்தியன்’ என்ற உணர்வை கலாமிற்கு தந்தது எனலாம்.
Comments
Post a Comment