கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்!
மும்பையில் அப்போது இருந்த கலாமிற்கு திடீர் என்று டில்லி வருமாறு தவானிடமிருந்து அழைப்பு வந்தது. அதனை ஏற்று கலாம் உடனடியாக டில்லி சென்றார். அங்கு தவானைச் சந்தித்தார். அப்போது தவான், கலாமிடம், ’கலாம்! பாரதப் பிரதமர் இந்திராகாந்தி உங்களை சந்திக்க விரும்புகிறார். மிக அவசரம். நாம் செல்லலாமா?’ என்று கேட்டார்.
தவானின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கலாம் சற்றே தயங்கியவராய் தனது உடையை பார்த்துக் கொண்டார். அதனை கவனித்த தவான்,’ என்ன கலாம் உங்களை நீங்களே ஏற இறங்கப் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? பிரதமரை சந்திப்பதில் தங்களுக்கு ஏதேனும் தயக்கம் உள்ளதா?’ என்று கேட்டார்.
‘இல்லை, இல்லை. பிரதமரை சந்திப்பது எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் பாருங்கள் நான் எப்போதும் போல் நீல வண்ணச் சட்டையைத் தான் இன்றும் அணிந்து உள்ளேன். கால்களுக்கு பூட்ஸ் கூட இல்லை. சாதாரண செருப்பைத் தான் அணிந்து இருக்கிறேன். இந்தக் கோலத்தில் நான் பிரதமரை சந்திப்பது சரியாக இருக்குமா? என்று தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்’ என்றார் கலாம்.
கலாம் இப்படிப் பேசியத்தைக் கேட்ட தவான்,’ மிஸ்டர் கலாம்! தாங்கள் உடைகளைப் பற்றியோ, அணியும் காலணிகளை பற்றியோ கவலைப்பட வேண்டாம். வெற்றி என்னும் பேரழகான ஆடையை நீங்கள் இப்போது அணிந்து கொண்டு உள்ளீர்கள். அதனால் தயங்காமல் வாருங்கள்’ என்று பெருமைப்படக் கூறி இந்திரா காந்தியிடம் அழைத்துச் சென்றார்.
எனினும் அப்போதும் கலாம் அரை மனதுடன் தான் தவானுடன் இணைந்து பிரதமரைக் காணப் புறப்பட்டார். அன்றைய தினம் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் நடைபெற இருந்தது.
அந்த அவையில் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையை சேர்த்து முப்பது உறுப்பினர்கள் கூடி இருந்தனர். அப்போது பிரதமர் எஸ்.எல். வி. யின் வெற்றியைப் பற்றிப் பாராட்டிப் பேசினார். அப்போது திடீர் என்று, ‘மிஸ்டர் கலாம், நீங்கள் பேசுங்கள். நாங்கள் அனைவரும் தங்களது பேச்சைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம்’ என்றார் பிரதமர். அதனைக் கேட்ட கலாம் எழுந்து நின்று இவ்வாறு பேசத் தொடங்கினார்.
‘இந்திய நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களின் இந்த மகத்தான கூட்டத்தில் நானும் கலந்து கொண்டதை பெருமையாக நினைக்கிறேன். முற்றிலும் நமது தாய் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை கோளைச் சுமந்து கொண்டு மணிக்கு 25,000 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்ட ஒரு ராக்கெட்டை நமது நாட்டிலேயே எப்படித் தயாரிப்பது என்பதை மட்டுமே அறிந்தவன் நான். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறிக் கலாம் பேசத் தொடங்கியதும் அரங்கமே அதிரும் படியாக கை தட்டி ஆரவாரம் செய்தனர் அந்த அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும்.
இறுதியாகக் கலாம்,’ தனக்கு இந்த நல்ல வாய்ப்பினை வழங்கி நமது நாட்டின் அறிவியல் வளமையை நிரூபிக்க வைத்தமைக்காக அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்’ என்று தனது பேச்சை முடித்தார்.
பிறகு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி தனக்கு கொடுத்த ஊக்கத்தின் காரணமாக எஸ். எல். வி.யின் அடுத்த கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்தார். அப்பணியில் இன்னும் அதீத ஆர்வத்துடன் இறங்கினார்.
அந்த சமயத்தில் வளிமண்டல இயக்கவியல் மற்றும் வடிவமைப்புக் குழுவின் இயக்குனர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. அங்கு இயக்குனர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கலாம், எதிர்கால ஏவுகணைகளை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது போன்ற பணிகளில் ஈடுபடத் துவங்கினார். இதற்கிடையே அறிவியல் விஞ்ஞானியான ராஜாராமண்ணா தலைமையில் டேராடூனில் எஸ். எல். வி. பற்றிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற கலாம் சென்றார்.
அந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது அந்த விழாவின் முடிவில் ராஜாராமண்ணா D.R.D.O. வில் கலாமை பணியாற்றுமாறு தவானின் அனுமதி பெற்று கேட்டுக் கொண்டார். கலாமும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன் காரணமாகப் பதினெட்டு ஆண்டுகள் தான் வெற்றி கரமாகப் பணியாற்றிய இஸ்ரோவில் இருந்து ராஜாராமண்ணா குறிப்பிட்ட D.R.D.O. நிறுவன ஆய்வுக் கூடத்தில் திட்ட இயக்குனராக 1982 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பதவி ஏற்றார்.
Comments
Post a Comment