அமெரிக்காவை அலறச் செய்த அக்னி ஏவுகணைத் திட்டம்
1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபதாம் நாள் அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்த முனைப்புடன் செயல்பட்டார் கலாம். இதற்கு ‘பொக்ரான்’ பகுதியை விஞ்ஞானிகள் தேர்ந்து எடுத்தனர். அப்பகுதியை சுற்றி இருந்த கிராம மக்களை எல்லாம் பாதுகாப்பு காரணங்கள் கருதி உடனுக்குடன் வேறு இடத்திற்கு மாற்றினர்.
இந்த ஏவுகணைச் சோதனையை நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தது. எனினும், சில வெளிநாட்டுக் கைக் கூலிகள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இடையூரு செய்ய அவர்கள் ஒரு திட்டத்தை மறைமுகமாக வகுத்து வைத்து இருந்தனர். அதற்குத் தகுந்தாற் போல இயந்திரக் கோளாறுகளினால் இரு முறை அக்னி ஏவுகணையின் செயல் திட்டம் வெற்றி அடையாமல் போனது. வழக்கம் போல சில உலகப் பத்திரிக்கைகள் இந்தத் தோல்வியை சுட்டிக் காட்டி கேலிக் கட்டுரைகளை வண்ணப் படங்களுடன் வெளியிட்டன. கலாமிற்கு இந்தக் கேலியும், கிண்டலும் ஒன்றும் புதிதல்ல. அதனால் அவற்றை அலட்சியம் செய்து கர்மமே கண்ணாக இருந்தார் அவர். இறுதியில் கலாம் மற்றும் அவரது குழுவினரின் கடும் உழைப்பால் அக்கினி ஏவுகணை 22.5.1989 அன்று வெற்றிகரமாக விண்ணில் காலை 7.10 மணி அளவில் செலுத்தப்பட்டது. வானத்தை கிழித்த படி சீறிப் பாய்ந்தது அக்னி. கலாம் உட்பட ஒவ்வொரு விஞ்ஞானிகளும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
‘கலாம்! உங்களுடைய முயற்சிகளின் வெற்றியினால் நாடே பெருமிதம் கொண்டு உள்ளது’ என்று கூறிக் கலாமை பாராட்டினார் அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி. மறுபுறம் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
இந்தியாவின் மகிழ்ச்சி இப்படியாக ஒரு பக்கம் இருக்க, வழக்கம் போல இந்தியா அதி சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்கி விட்டது என்பதை அறிந்த அமெரிக்கா இந்தியாவை கொஞ்சம் மிரட்டிப் பார்த்தது. இதற்கெல்லாம் அஞ்சுமா நமது பாரதம்! அமெரிக்காவின் கண்டனத்தை பொருட் படுத்தவே இல்லை.
இப்படியாக விண்வெளிச் சாதனையில் கலாமின் குழுவினர் மூலமாக இந்தியா விசுவரூபம் எடுத்தது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்குமே பெருமையைத் தேடித் தந்தார் கலாம். இதனால் அவர் புகழின் உச்சிக்கே சென்றார். இருந்தாலும் அந்தப் புகழுக்கு அவர் சிறிதும் மயங்கவில்லை என்பது தான் உண்மை.
சில விதண்டாவாதிகள் கலாமிடம், ‘உங்களது ஏவுகணை கண்டுபிடிப்பு அழிவிற்கு வழி வகுத்து விடும்’ என்று கூற.
அந்த உத்தம மகாத்மாக்களிடம் ‘நாடு அமைதியாக இருக்க வேண்டுமானால் இந்த ஏவுகணைகள் மிகவும் அவசியம். இல்லையென்றால் அந்நிய நாடுகளின் அச்சுறுத்தலுக்கு நாம் அனைவரும் பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை தான் உருவாகும்’ என்று விளக்கம் அளித்தார் கலாம்.
பிறகு தொடர்ந்து தனது ஆராய்ச்சியில் மும்முரமாக இறங்கிய கலாம். தனது அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில் அக்னி வரிசைகளை தொடர்ந்து வெளியிட்டார். அதன் பிறகு அவரது வழியில் அக்கினி 5 ஏவுகணை 5,000 முதல் 8,000 கிலோமீட்டர் தொலைவுக்குப் பறந்து சென்று தாக்கக் கூடியதாக உருவாக்கப்பட்டது. பிருத்வி வரிசையிலும் அதீத திறன் கொண்ட ஏவுகணைகள் தொடர்ந்து கலாமின் வழி காட்டுதலில் உருவானது. அதனால் மக்கள் கலாமை ‘ஏவுகணை மனிதர்’ என்று அன்பாகக் கூறியும் அழைக்கத் தொடங்கினார்கள். அதே போல கலாமின் கண்டு பிடிப்பில் உருவான எஸ். எல். வி. ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டாக முன்பை விட அதிக திறனுடன் உருவானது. அது ஆக்க பூர்வ விஷயங்களுக்கு இன்று வரையில் கூட பெரிதும் உதவி வருகிறது.
இப்படியாக இந்தியாவின் ராணுவ பலத்தை நவீன ஆயுதங்களை உருவாக்குவதன் மூலம் பெருக்கியவர் நமது கலாம். எனினும் நாட்டின் உண்மையான எதிரி வறுமை தான் என்று சாடினார் அவர். அத்துடன் ஆயுதங்களை உருவாக்கிய கலாம் அமைதியைத் தான் உண்மையில் நேசித்தார்.
Comments
Post a Comment