கலாம் இழந்த வாய்ப்பு
தனது கல்விப் படிப்பை முடித்த கலாம் பெங்களூர் சென்றார். அங்கே 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்தில் பயிற்சி பெற்றார்.
அங்கு விமானத் தொழில் நுட்பத்தில் தனது அறிவை மேலும் மேம்படுத்திக் கொண்டார். அத்துடன் விமானத்தை இயக்குபவர்களும், பயிற்சி அளிப்பவர்களும் விமானப் பொறியியல் பட்டதாரிகள் அல்ல. உண்மையில் எந்த விதப் பட்டமும் பெறாமல் தனது அனுபவத்தைக் கொண்டு இயந்திரங்களை இயக்கும் மெக்கானிக்குகள் தான் உண்மையான திறமை சாலிகள் என்பதை கலாம் அறிந்து கொண்டு அவர்களுடன் நன்கு பழகினார். அதன் காரணமாக அவர்களிடம் இருந்து பலதரப்பட்ட அனுபவ பாடங்களை மிகப் பொறுமையாக கற்றுக் கொண்டார். அதிலும் குறிப்பாக விமானத்தைப் பறக்க வைக்கும் 'புரபெல்லர்' இயந்திரங்களைப் பற்றி கலாம் நன்கு அறிந்து கொண்டார்.
விமானத் தொழில் நுட்பத்தில் இருந்த அதீத ஈடுபாட்டின் காரணமாக எம். ஐ. டி. சான்றிதழ் கொண்டு விமானப் படையில் பணிபுரிய விண்ணப்பம் செய்து இருந்தார் கலாம். எனினும் ‘டேராடூனில்’ உள்ள விமானப் படை தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் வேலை பெரும் வாய்ப்பினை கலாம் இழந்தார்.
நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்த கலாம் மிகவும் வருந்தினார். மனம் நிம்மதி இன்றி தவித்தார். அதனால் மன அமைதி வேண்டி அவர் ஒரு இஸ்லாமியராக இருந்தும் கூட ரிஷிகேசம் சென்றார். அங்கிருந்த சுவாமி சிவானந்தரை சந்தித்து தனது மன வேதனையை அவரிடம் பகிர்ந்து கொண்டார்.
கலாம் சொன்னதைக் கேட்ட சுவாமிஜி,’ இதனைத் தோல்வி என்று நீ எண்ண வேண்டாம். விமானப்படை விமானியாக நீ ஆக வேண்டும் என்று உனக்கு விதிக்கப் படவில்லை போலும். அதை விட இறைவன் உனது வாழ்க்கையில் செயல் படுத்த மிகப் பெரியதொரு திட்டத்தை வைத்து உள்ளார் போலும். அது விரைவில் உனக்கு கிட்ட வேண்டும் என்று நானும் அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கவலையை விடு. சந்தோஷமாக இரு. எல்லாம் வாழ்க்கையில் நல்லதாகவே நடப்பத்தை நீ இனி காண்பாய்’ என்று கூறி ஆசிர்வாதம் செய்து கலாமை அனுப்பி வைத்தார். சுவாமி சிவானந்தரை சந்தித்தது கலாமிற்கு மிகுந்த ஆறுதலை அளித்தது.
சுவாமிஜியை சந்தித்த பிறகு கலாம் ரிஷிகேஷில் இருந்து புது டில்லியில் இருந்த பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். அதில் கலாம் தேர்ந்தெடுக்கப் பட்டதின் பேரில் முதுநிலை விஞ்ஞான உதவியாளராகப் பணியில் நியமிக்கப்பட்டார். தான் நினைத்ததை விட ஒரு நல்ல வாய்ப்பை தந்த இறைவனை கலாம் வேண்டினார். ஆண்டவனுக்கு நன்றியும் கூறினார். இந்தச் சம்பவத்தை பிற்காலத்தில் அடிக்கடி தனது வாழ்க்கையில் நினைத்துப் பார்த்து நெகிழ்ந்து உள்ளார் கலாம்.
Comments
Post a Comment