கலாமிற்கு வந்த காதல் கடிதங்கள்
புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற கலாம் மக்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று மனதார எண்ணினார். அதன் ஆர்வத்தால் பல காரியங்களை செய்தார். மக்களிடம் இருந்து பல்வேறு புகார்களை வரவேற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகை முகவரி மட்டுமில்லாமல் தன் இமெயிலுக்கும் புகார் அனுப்பலாம் என்று கலாம் அறிவித்தது ஒரு கட்டத்தில் ரோதனையாகப் போனது. இரண்டு நாட்களில் பிரச்சனை களையப்படும் என்று உறுதிமொழி வேறு கொடுத்தார். மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்று கலாம் நினைத்ததில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால் ஒரு கவுன்சிலர் செய்ய வேண்டிய வேலையை நாட்டின் முதல் குடிமகன் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தால் என்ன ஆவது?
இந்நிலையில், திடீர் என ஆக்ராவிலிருந்து ஒரு இமெயில்.
அங்கிள்,
எங்கள் பகுதியில் ஒரேயொரு பூங்கா தான் உள்ளது. அதில் ஒரேயொரு சீசா தான் உள்ளது. அதுவும் கூட செயல்படாமல் இருக்கிறது. சீக்கிரம் நிறைய சீசாக்களை அப்பூங்காவில் நிறுவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பேபி...
சிறுமி ஒருத்தி கலாமை நம்பி இப்படியொரு புகார் அளிக்க, கலாம் ஆக்ரா கலெக்டரைத் தொடர்பு கொண்டு பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அடுத்தச் சில நாள்களில் தேங்க்யூ அங்கிள் என்று பதில் கடிதம் வந்தது.
இது தவிர, பல்வேறு காரணங்களை முன்வைத்து தற்கொலை மிரட்டல் கடிதங்களும் கலாமுக்கு வந்தன. ஒவ்வொன்றுக்கும் பதறினார். அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். என் பணத்திலிருந்து இவர்களுக்கு உதவுகிறேன் என்றார்.
இது நாயர் உள்பட குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளுக்கு எரிச்சலைத் தந்தது.
இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பது தான் கலாமின் வேலையா என்று முடிவு செய்து நேரடியாகவே கலாமிடம் கேட்டுவிட்டனர்.
‘குடியரசுத் தலைவராக நீங்கள் செய்ய வேண்டியது வேறு எவ்வளவோ இருக்கிறது. மக்கள் பிரச்னையை மக்கள் பிரதிநிதிகள் பார்த்துக் கொள்வார்கள். மேலும் நாம் தொடர்ந்து அரசு அதிகாரிகளை நிர்பந்திப்பதால் அவர்களும் இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று நம் கட்டளைகளை அலட்சியப்படுத்துகின்றனர். இனிமேல் கடிதங்களை அதன் தேவையின் அடிப்படையில் பிரித்து பதில் கொடுப்போம். நம் நேரமும் மிச்சமாகும். அநாவசியக் கடிதங்களும் நம்மை வந்து சேராது’ என்றனர்.
இதனைக் கேட்ட கலாம் அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் முக்கியக் கடிதங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முக்கியமில்லாத கடிதங்களுக்கு, கிடைக்கப் பெற்றோம் என்று அக்னாலெட்ஜ்மெண்ட் கடிதம் அனுப்பப்பட்டது. இது அதிகாரிகளுக்கு ஒரு பெரிய நிம்மதியை ஏற்படுத்தியது.
இந்தக் கடிதங்களில் சில காதல் கடிதங்களும் கலாமுக்கு வந்தன. புகைப்படங்களை கடிதத்தோடு இணைத்து வந்த விருப்பக் கடிதங்களைப் பார்த்துவிட்டு, எப்படி என் வயதைக் கூட பொருட்டாக எண்ணாமல் இப்படியெல்லாம் கடிதங்கள் எழுதுகிறார்கள் என்று கலாம் ஆச்சரியப்பட்டார். இதில் உள்ள இன்னொரு ஆச்சரியம், இந்த பர்சனல் கடிதங்கள் எல்லாம் அவருடைய அதிகாரிகள் முன்னால் வாசிக்கப்பட்டவை தான்.
Comments
Post a Comment