ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி
கலாம் குடியரசுத் தலைவராகி தன் புதிய இல்லமான 329 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஷ்டிரபதி பவனுக்குக் குடிபோன பிறகு நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார். ராஷ்டிரபதி பவனின் வரவேற்பு அறை அரசு அலுவலகம் போல களையிழந்து கிடந்ததைக் கண்டு முதல் வேலையாக அதை அழகு செய்தார் கலாம். புதிய தரைத்தளங்கள் மாற்றப்பட்டு சுவர்களில் பெயிண்டிங்குகள் மாட்டப்பட்டன. பார்வையாளர்கள் அமர்வதற்கு சொகுசு சோஃபா வாங்கப்பட்டது. குழந்தைகள் கேலரி ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக அழகான மொஹல் பூங்காவில் மேலும் இரண்டு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று மூலிகைச் செடிகள் கொண்ட பூங்காவாகவும் மற்றொன்று குழந்தைகளுக்கான பூங்காவாகவும் தயாரிக்கப்பட்டன. 127 வகையான ரோஜாக்கள் நடப்பட்டன. இந்த மாற்றங்கள் அனைத்தும் ராஷ்டிரபதி பவனுக்குத் தனியழகு கொடுத்தன.
உயிரியல் பூங்காவில் உள்ள மான்கள், மயில்கள், முயல்கள், வாத்துகள் போன்ற உயிரினங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. ஒரு குடியரசுத் தலைவரின் மாளிகை நந்தவனம் போன்று உள்ளது என்று அத்தனை பேரும் பாராட்டினார்கள்.
மொஹல் தோட்டம் கிட்டத்தட்ட கலாமின் பர்சனல் அறையாக மாறிப்போனது. கலாமைச் சந்திக்க வருகிற அனைவரையும் மொஹல் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று உரையாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார்.
கலாம் குடியரசுத் தலைவர் ஆனநாள் முதல் மாளிகைக்கு வருகை தருகிற மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிப் போனது. சிலசமயம் தினம் 3,000 பேர், 6000 பேர் எல்லாம் சர்வ சாதாரணமாக கலாமைப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதனால் பார்வையாளர்களை வரவேற்பதிலிருந்து அவர்களை உபசரித்து பத்திரமாக வழி அனுப்பவது வரை சவாலான வேலையாக இருந்தது. சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அது சர்வதேசப் பிரச்னை ஆகிவிடும். ஆனாலும் பார்வையாளர்களின் வருகைக்கு கலாம் ஒருபோதும் கடிவாளம் போட்டது கிடையாது. இப்படியாகக் கலாம் பதவி வகித்த 5 வருட காலமும் ராஷ்டிரபதி பவன் மக்கள் பவனாகவே இருந்தது.
Comments
Post a Comment