ஆடம்பரத்தை விரும்பாதவர் கலாம்
கலாம் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்பு 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் நாளில் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது அவர் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார்.
அந்த வகையில் ஒரு விழாவிற்கு சென்ற கலாம் விழா மேடை வரையில் இருந்த பாதையில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். அதில் நடந்து செல்ல பிடிக்காத அவர் சுரங்கப் பாதை வழியே வரவேற்பு மேடைக்குச் சென்றார். இப்படியாக கலாம் எப்போதுமே ஆடம்பரங்களை எந்த வகையிலும் அனுமதிக்காதவராக இருந்தார்.
அதே போல இன்னொரு விழாவில் மாணவர்களை சந்தித்த பேசினார் கலாம். அப்போது கலாமிடம்,’ கனவு காண வேண்டும் என்று நீங்கள் எப்போதும் சொல்லி வருகிறீர்கள். ஏன் கனவு காண வேண்டும்? எதற்காகக் கனவு காண வேண்டும்?’ என்று கேட்டாள் ஒரு மாணவி.
‘கனவு காண்போம். கனவு காண்போம். அப்போது தான் கனவுகள் எண்ணங்களாக மாறும். எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். அதன் மூலம் முன்னேற்றங்கள் பல நம்மை வந்து அடையும்’ என்று பதில் அளித்தார் கலாம்.
அடுத்து அந்த விழாவில் சுடர் கொடி என்னும் மாணவி, ‘மனிதன், விஞ்ஞானி, தமிழன், இந்தியன் இந்த அடிப்படையில் உங்களை நீங்களே வரிசைப் படுத்த முடியுமா?’ என்று கேட்டாள்.
‘மனிதனுக்குள் மற்ற மூவரும் அடங்கி இருக்கிறார்கள்’ என்று அழகாக பதில் அளித்தார் கலாம்.
Comments
Post a Comment